ஓவியம்: ஷண்முகவேல்
இது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா!’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.
இவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.
அரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2
இத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.
ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.